பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.16-
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, வரும் நாட்களில் மேலும் பல பிரிவுகள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாருட் மற்றும் லெம்பா பந்தாய் ஆகிய இரண்டு பிரிவுகள் முதலில் கலைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஜோகூர், சபா, சிலாங்கூர், பகாங் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில், கணிசமான எண்ணிக்கையிலான பிரிவுகள், விரைவில் இதனைப் பின்பற்றி கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை, ஹம்ஸாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அவரது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான லாருட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிற்குப் பிறகு, அத்தொகுதியின் பெர்சத்து பிரிவானது கலைக்கப்பட்டது.
கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் மீதான நம்பிக்கையை இழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லாருட் பிரிவுத் தலைமை குறிப்பிட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் விளைவாக லாருட் பிரிவின் கீழ் செயல்பட்டு வந்த 48 கிளைகள் கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








