கோலாலம்பூர், மார்ச்.02-
பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்ஸா ஸைனுடினுக்குப் பதிலாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தான் முன்வந்ததாகக் கூறப்படும் தகவல்களைப் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி ஜிடின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பெர்சத்து கட்சியின் தற்போதைய உதவித் தலைவர்களில் ஒருவரான அவர், இந்தச் செய்தியை ஓர் 'அவதூறு' என்று சாடியுள்ளார்.
அண்மையில் திரெங்கானுவில் பாஸ் கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் மற்றும் சில முக்கியத் தலைவர்களைச் சந்தித்த போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான தனது வேட்புமனு குறித்து எந்த ஒரு பேச்சும் எழவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தச் சந்திப்பில் பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசானும், பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ரசாலி இட்ரிசும் உடனிருந்ததைச் சுட்டிக் காட்டிய ராட்ஸி ஜிடின், தனது தரப்பில் அத்தகைய கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.








