நடப்பு மாநில அரசாங்கத்தை தற்காத்துக்கொண்டால் மட்டுமே மலாய்க்காரர்கள் மட்டுமின்றி சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்கும் இன்னும் அதிகமான அனுகூலங்களையும், நன்மைகளையும் பெற்றுத் தர முடியும் என்று ரெப்பா தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.
கடந்த 12 நாட்களாக ரெப்பா தொகுதியில் வீடு வீடாக சென்று தாங்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தில், பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்கார வாக்காளர்களின் ஆதரவு சற்று அதிகரித்து இருப்பதைப் போல் தெரிகிறது. இதற்கு காரணம், பக்காத்தான் ஹராப்பான் அரசில், வார்கா எமாஸ் போன்ற மூத்தக் குடிமக்களுக்கான திட்டங்களில் மக்கள் அதிக நன்மை அடைந்து இருப்பதாக அவர்கள் நேரடியாக தங்களிடம் கூறியதை அறிய முடிகிறது என்று வீரப்பன் விவரித்தார்
"இந்தத் தேர்தல், ஒரு சாதாரணத் தேர்தல் அல்ல. மாநில மக்கள் கண்டிப்பாக நடப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்; ஏனெனில், இது மிகச் சவாலான ஒரு தேர்தலாகும். எனவே, ரெப்பா தொகுதி மட்டுமின்றி, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களின் முழு ஆதரவைத் தந்து, அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று இத்தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளருடன் நேரடிப் போட்டியை எதிர்கொள்ளும் வீரப்பன் மிக உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.









