இந்தியாவின் சென்னை நகரிலிருந்து மலேசியாவிற்கு வருகை புரிந்த மாணவர் குழுவை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கு வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்த குழுவில் சென்னை, ஸ்ரீமதி தேவகுன்வர் நன்னாலால் பட் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 35 மாணவர்கள் மற்றும் 3 ஒருங்கிணைப்பாளர்கள் இடம்பெற்றனர்.
அவர்கள் அனைவரும் சர்வதேச இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.
மாணவர்களின் மலேசிய வருகையின் நோக்கமானது, மலேசியாவின் இளைஞர் வளர்ச்சி திட்டங்கள், மாநில ஆட்சி அமைப்பு மற்றும் நாட்டின் பல்துறை கலாச்சாரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குவது ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில சட்டமன்றம் குறித்த விளக்கவுரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேவேளையில், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் உடன் கலந்துரையாடல் அமர்வு, சட்டமன்ற அரங்கைப் பார்வையிடல், புகைப்பட அமர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூக முன்னேற்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கு குறித்து மாணவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.
இந்நிலையில், மாணவர்களுக்கு விளக்கவுரை வழங்கிய சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான்-கிற்கு சிறப்பு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.








