கோலாலம்பூர், ஜனவரி.02-
பெர்லிஸ் மாநிலத்தில் புதிய மந்திரி பெசார் தலைமையிலான ஆட்சிக் குழுவில் இடம் பெறப் போவதில்லை என்ற முடிவானது, பெர்லிஸ் அரச மாளிகைக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்று பாஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.
கட்சியின் கொள்கை அடிப்படையிலும், முன்னாள் மந்திரி பெசார் ஷுக்ரி ரம்லியுடனான ஒற்றுமை மற்றும் ஆதரவின் வெளிப்பாடாகவும் மட்டுமே அம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
பெர்லிஸ் அரசாங்கத்திற்கும், பெர்லிஸ் ராஜா மேன்மை தங்கிய துவாங்கு சையிட் சிராஜுடின் சையிட் ஜமாலுலாயிலின் பங்களிப்பிற்கும் பாஸ் கட்சி தமது முழு ஆதரவை வழங்குவதாக அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமிமி தையிப் அஸாமுடின் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி, புதிய மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸாவின் பதவிப் பிரமாண சடங்கில், பாஸ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டது. மாநில அரசாங்கத்திற்குத் தொடர்ந்து தாங்கள் வழங்கி வரும் ஆதரவைக் காட்டுகிறது என்றும் அஃப்னான் குறிப்பிட்டுள்ளார்.
பெர்சாத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையிலான மோதல், பெரிக்காதான் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பதவி விலகல் என பெர்லிஸ் மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகள் அனைத்து ஒன்றிணைந்து ஒரே குடும்பமாகச் செயல்பட வேண்டுமென பெர்லிஸ் ராஜா வலியுறுத்தினார்.
என்றாலும், பெர்லிஸ் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் அபு பாக்காரின் ஆட்சிக் குழுவில் இடம் பெறப் போவதில்லை என பாஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.








