சிறைச்சாலைச் சட்டம் 1995-இல் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத் தேர்வுக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், அரசாங்கம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள "பாதுகாப்பு" என்ற சொல், சிறைச்சாலைத் துறைக்கு சட்ட விலக்கு வழங்குவதாக சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளதாக கூறிய அவர், இது குறித்து மேலும் விளக்கமளிக்கவும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவரித்துள்ளார்.
அதேவேளையில், அதிகாரிகளின் தவறுகளை மறைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அலட்சியம் அல்லது விதிமீறல் ஏற்பட்டால் சிறைச்சாலை அதிகாரிகள் மீது வழக்கம் போல் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி, சிறைச்சாலை (திருத்த) மசோதா 2026-ஐ பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக்குழுக்களுக்கு மீண்டும் அனுப்ப, அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக துணை உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








