சிரம்பான், ஆகஸ்ட்.02-
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16வது மாநிலத் தேர்தலில் வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் ஜசெகவுக்கு ஆதரவளித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வேட்பாளர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பையும் பாராட்டிய கோபிந்த் சிங், Senawang தொகுதியில் கடும் போட்டிக்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அடைந்த தோல்வியையும் ஜசெக ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தோணி லோக் பல ஆண்டுகளாக கட்சிக்கும் மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இனியும் அதே அர்ப்பணிப்புடன் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இதற்கு முன்பும் ஜசெக பல்வேறு தேர்தல் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாக சுட்டிக் காட்டிய கோபிந்த் சிங், இந்தத் தேர்தல் முடிவானது வாக்காளர்களின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் முடிவுகளை முழுமையாக மதிப்பீடு செய்து, மக்களின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் கவனமாகக் கேட்டு, அவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மீண்டும் பெற கடுமையாக உழைப்போம் என்றும் அவர் உறுதியளித்தியுள்ளார்.
அதேவேளையில், மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை மதிப்பதாக தெரிவித்த கோபிந்த் சிங், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
புதிய அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட்டு, எப்போதும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








