கோலாலம்பூர், பிப்ரவரி.10-
வெளிநாடுகளில் வசித்து வரும் மலேசியர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அவற்றில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்துவதும் அடங்கும் என்று சட்டச் சீர்த்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் உட்பட, வெளிநாட்டு அஞ்சல் வாக்களிப்பின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பிற பங்குதாரர்களால் வழங்கப்படும் கருத்துக்களை ஆணையம் நிச்சயமாக கருத்தில் கொள்ளும் என்று அஸாலினா நாடாளுமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார்.








