அலோர் ஸ்டார், பிப்ரவரி.23-
கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அனைத்தும் இம்மாநில இந்து சங்கத்திடம் கலந்தாலோசிக்கப்பட்டு வந்தாலும் அதில் ஒரு சில பிரச்சனைகள் உள்துறை அமைச்சின் ஆலோசனைகள் தேவை என்றார் கெடா மாநில இந்து சங்கத்தின் தலைவர் பரமசிவன்.

நேற்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் அவரின் அரசியல் செயலாளர் ஒமார் முக்தார் அவருடன் கெடா மாநில இந்து சங்கம் சிறப்பு சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சுங்கை பட்டாணியில் அமைந்துள்ள இந்து சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றன. இம்மாநிலத்திலுள்ள 7 மாவட்ட பேரவைகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
இம்மாநில இந்து சங்கத்தின் தலைவர் பரமசிவன் கூறுகையில் இந்த சந்திப்புக் கூட்டத்தில் முதன்மையான நோக்கமே ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உள்துறை அமைச்சுப் பார்வைக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் என்றார். அண்மையில் நாடு முழுவதும் ஆலயங்களை " HARAM " என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவுப்படுத்திப் பலரும் சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். ஆனால் இதுவரை அரசாங்கம் அதற்கான முறையான நடவடிக்கைகள் எடுத்தார்களா என்பது இன்னும் இந்து சங்கம் அறியவில்லை என்றார். கெடா மாநிலம் மட்டுமல்லாமல் எந்த மாநிலமாக இருந்தாலும் சமயம் என்றாலே முதலில் இந்து சங்கத்தைத்தான் நாடி வருகிறனர். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் KUIL HARAM பிரச்சினை எழுந்தச் சமயத்தில் அரசாங்கம் இந்து சங்கத்தை அழைத்து அப்பிரச்சனைக்கான தீர்வைக் காணவில்லை என்பது தங்களின் கேள்வியாகும் என்று ஒமார் முக்தாரிடம் கூறினார் பரமசிவன்.

தொடர்ந்து , கெடா மாநிலத்தில் 265 ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் சில ஆலயங்கள் சங்கப் பதிவு இலாகா (ROS) பிரச்சனைகள், நில பிரச்சனைகள் என சிக்கல்களை எதிர்நோக்கி வந்தாலும் இறுதியில் அவை அனைத்தும் இந்து சங்கத்தின் பார்வைக்கே வருகின்றது. இப்பிரச்சனைக்கு அனைத்துக்கும் ஒரு தீர்வு வேண்டுமென்றால் முதலில் உள்துறை அமைச்சின் கீழ் இருக்கும் சமூக பதிவு இலாகாவிலிருந்து முறையான ஆலயங்கள் பதிவுகள் பற்றிய விளக்கம் அளிக்க முன் வர வேண்டும். ஏனென்றால் ஆலயங்கள் அனைத்தும் சங்கப் பதிவு இலாகாவில் தான் பதிவுச் செய்யப்படுவதாக பரமசிவன் குறிப்பிட்டார்.
ஒருமைப்பாட்டு அரசாங்கம் மூவினத்தின் உணர்வுகளையும் அவர்களின் சமயத்தையும் மதிக்க வேண்டும். அதே போல் இம்மாநிலத்திலுள்ள இந்தியர்களின் தேவைகளைக் கேட்டு அறிந்து பூர்த்திச் செய்வதற்கு கெடா மாநில மக்கள் நீதி கட்சியின் தலைவரான டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுததியோன் முன்வர வேண்டும் என்றார்.

இதற்கிடையில், டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் அவரின் அரசியல் செயலாளரான ஒமார் முக்தார் கூறுகையில் அமைச்சரின் ஆலோசனைப்படி முதற்கட்டமாக கெடா மாநில இந்து சங்கத்தைச் சந்தித்து இம்மாநிலத்திலுள்ள பிரச்சனைகளை கண்டறியும்படி டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார். இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட அனைத்து பிரச்சனைகள் மற்றும் கருத்துகள் கட்டாயம் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் அவரின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும். இப்பிரச்சினைகளைக் கேட்டறிவது தன்னுடைய கடமையாகும். அதற்கான தீர்வினைக் எடுக்கும் முழு பொறுப்பும் அமைச்சுக்கு மட்டுமே உள்ளது என்றார் ஒமார் முக்தார். அதே சமயத்தில் இப்பிரச்சனை அனைத்துக்கும் மிக விரைவில் சுமுகமான பதிலை டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்றார்.








