சுங்கை பட்டாணி, மே.17-
மலேசியாவில் 6.5% இந்திய மக்கள் தொகையிலிருந்து 20% இந்தியர்கள் சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருவதாக கெடா மாநில சிறப்பு பிரிவுத் துறையின் தலைவர் எஸ்ஏசி அ.அ. அன்பழகன் தெரிவித்தார்.

இந்தியச் சமுதாயத்தில் இன்னும் குற்றச்செயல்கள் தலைதூக்கிக் கொண்டே செல்கின்றது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் பல குற்றங்களைப் புரிந்து வருகின்றனர். நம் சமுதாயத்திற்கு இன்னும் குற்றச்செயல்களின் விழிப்புணர்வு தேவை என்றார் அ.அ. அன்பழகன்.
நேற்று கெடா சுங்கை பட்டாணி பீடோங் வட்டாரத்தில் அமைந்துள்ள ஹர்வாட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் 219 வது மலேசிய காவல்படைத் தினத்தை முன்னிட்டு கெடா மாநில காவல்துறையின் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. அப்பிரார்த்தனையில் சிறப்புப் பிரமுகராக கலந்துக் கொண்ட அ.அ. அன்பழகன் மேற்கண்டவாறு கூறினார். காவல்துறையினர் மக்களின் நலனிலும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் அதிக அளவில் போராடி வருகின்றனர். அதே சமயத்தில் மக்களாகிய நாமும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நம் சமுதாயத்தில் குற்றச்செயல்களைக் குறைக்க முடியும் என்றார். பெற்றோர்களாகிய நாமும் குழந்தைகளின் நடவடிக்கைகளைச் சிறுவயதிலிருந்து கண்காணித்து வருவது மிகவும் அவசியம். இதனை அனைவரும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து இப்பிரார்த்தனையில் கெடா மாநில இந்திய காவல் அதிகாரிகளின் சார்பில் பி40 குடும்பத்தைச் சேர்ந்த 20 அன்பர்களுக்கு உதவிப் பொருட்களையும் எடுத்து வழங்கினார் அ.அ. அன்பழகன். ஒவ்வோர் ஆண்டும் காவல்படை தினத்தின் பிரார்த்தனையில் அனைத்து காவல்துறையினர்களும் பாதுகாப்பாக அவர்களின் சேவைகளில் ஈடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளப்பட்டு வருகிறது.

கெடா மாநில அளவிலான 219 வது காவல்படை சிறப்புப் பிரார்த்தனையில் கோலா மூடா மாவட்டத்தின் துணைத் தலைமை அதிகாரி சூப்ரிண்டென்டன் சரவணன் மற்றும் 11 மாவட்ட காவல்நிலையத்தின் இந்திய அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








