ஷா ஆலாம், மே.03-
கடந்த 30.4.2026 மாலை 7.30 மணியளவில், ஷா ஆலாம் குலாப்பா உணவகத்தில், பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு சமுதாயச் செயற்பாட்டாளரும் கொடை நெஞ்சருமாகிய பசீர் அகமது தலைமையில் நடைபெற்றது. அவர் தமதுரையில் துன்பத்தில் இருக்கும் பாலஸ்தீனர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம் என்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஷா ஆலாம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ காலிட் யுசோப் பேசுகையில், பாலஸ்தீனர்களின் துன்பத்தினை ஓர் இன அல்லது ஒரு மதப் பிரச்சனையாகப் பார்க்காமல் இதனை மாந்தநேய பிரச்சனையாக நோக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்ரி யுசோப் பேசுகையில், மலேசியர்கள் இன பேதமின்றி பாலஸ்தீன பிரச்சனைக்கு உதவுவதும் துணை நிற்பதும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மூத்தப் பத்திரிக்கையாளரும் சமூகப் போராளியுமாகிய "எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பேசுகையில், பாலஸ்தீனர்கள் மீது மாந்தநேயமற்ற முறையில் தொடுக்கப்படும் போரினை கண்டித்ததோடு, அந்த மக்களுக்கு துணை நிற்போம் என்று குறிப்பிட்டார்.
கொடை நெஞ்சர் டத்தோ தாஜுடின் பேசுகையில், விரைவில் இந்த பாலஸ்தீனப் பிரச்சனை முடிவுற்று மக்கள் நிம்மதியாக வாழ நாம் துணை நிற்போம் என்றார். பாசீர் அகமது வழியாக பெறப்பட்ட நிதியினை, பாலஸ்தீன பிரதிநிதி சரீப் அபு சலமா அவர்களிடம் வழங்கப்பட்டது. நிதியினைப் பெற்றுக் கொண்ட அவர், மலேசியர்களும் மலேசிய அரசும் பல வழிகளில் பாலஸ்தீனர்களுக்கு உதவி வருவதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். பின்னர் சிறப்பு வருகையாளர்களுக்கு பாலஸ்தீனச் சிறப்பு துண்டு அணிவித்து மகிழ்ந்தார்.
இந்தக் கூட்டத்தில் மனிதநேய பண்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகையாளர்களுக்கு விருந்தோம்பலும் வழங்கப்பட்டது.








