பட்டவொர்த், பிப்ரவரி.15 –
செபராங் பெராய் வடப்பகுதியில் உள்ள இந்திய சமூகத்தின் நீண்ட காலத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், பாகான் டாலாமில் இரண்டு இன்சினரேட்டர் ( Incinerator ) வசதிகளுடன் நவீன மின் சுடலை அமைக்கப்பட உள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியால் இத்திட்டத்திற்காகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 1.5 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கியுள்ளார் என்று அறப்பணி வாரியத்தின் தலைவரும், ஜெலுத்தோங் எம்.பி.யுமான ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார்.
இது குறித்து ஆர்.எஸ்.என். ராயர் மேலும் கூறுகையில் இத்திட்டம் பட்டவொர்த், செக்ஷன் 4, ஜாலான் தெலாகா ஆயர், லாட் 2236 பகுதியில் 4,000 சதுர அடி பரப்பளவில் அமையவிருப்பதாகத் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கான கட்டுமானக் குத்தகை டெண்டர் வரும் மார்ச் 9-ஆம் தேதி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும். தகுதியான நிறுவனங்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.
முன்னாள் நிதியமைச்சரும், பகான் எம்.பி.யுமான லிம் குவான் எங்கின் ஆதரவுடனும், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி ஒப்பந்தம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
ஒன்பது மாதக் காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு இறுதிக்குள் இந்த மின் சுடலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ராயர் குறிப்பிட்டார்.
செபராங் பிறை வட்டாரத்தில் இந்த மின் சுடலைத் திட்டம் பல ஆண்டுகளாக, பல போராட்டத்திற்கு பிறகு நிறைவேறவிருப்பதாக ராயர் குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கமும் பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் இந்திய சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நவீன மின் சுடலைத் திட்டம் இந்து சமூகத்தின் இறுதிச் சடங்குகளை முறைப்படுத்தவும், எளிதாக்கவும் பெரிதும் உதவும் என ராயர் தெரிவித்தார்.
இக்கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடத் தொழில்முறை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிச் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்றும் இந்து அறப்பணி வாரிய ஆணையரும், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதமர் வழங்கிய நிதி ஒதுக்கீட்டிற்குப் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்றம் தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக ராயரும், குமரனும் குறிப்பிட்டனர்.








