ஜோகூர் பாரு, ஜூலை.20-
ADTEC செனாய் உட்பட ஆறு ADTEC JTM வளாகங்களில் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் TVET சுற்றுச்சூழல் அமைப்பை நவீனமயமாக்குவதில் மனிதவள அமைச்சும் ஹுவாவேய் மலேசியாவும் கேந்திர ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன. இந்த முயற்சி இவ்வாண்டு டிசம்பர் மாத வாக்கில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவேக வகுப்பறை மற்றும் இலக்கவியல் வகுப்பறை, கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) மற்றும் Huawei IdeaHub ஸ்மார்ட்போர்டுகளை அடிப்படையாகக் கொண்ட கலப்பு கற்றல் அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. அவை வளாகம் முழுவதும் நிகழ் நேரக் கற்றல், பதிவு செய்தல் மற்றும் உள்ளடக்கப் பகிர்வை ஆதரிக்கின்றன. 41 பயிற்றுனர்கள் ஹுவாவேய் மலேசியாவிலிருந்து தொழில்முறை பயிற்சிப் பெற்றுள்ளனர்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இந்த முயற்சி டிஜிட்டல் பணியாளர்களை மேம்படுத்துவதற்கும் TVETகள் பொருத்தமானதாக இருப்பதை உறுதிச் செய்வதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் ஒத்துப் போகிறது என்றார். அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதற்காக, ஆறு PoC இடங்களும் இப்போது முகவர் நிலையங்கள், அமைச்சுகள் மற்றும் பிற நிறுவனங்களின் வருகைக்காகத் திறக்கப்பட்டுள்ளன.

இந்த ஒத்துழைப்பு, 2024 டிசம்பரில் மலேசியா-சீனா உச்சநிலை மாநாட்டின் போது கையெழுத்திடப்பட்ட KESUMA-Huawei புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இது TVET துறையில் 5G மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது.

ADTEC கோலாலம்பூரில் உள்ள JTM-Huawei TVET கற்றல் மையம் இதுவரை 700 க்கும் மேற்பட்ட நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது, இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 பங்கேற்பாளர்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. TalentCorp ஆய்வின்படி, மலேசியாவில் 620,000 வேலைகள் தற்போது ஆட்டோமேஷனால் மாற்றப்படும் அபாயத்தில் உள்ளன. இதனால் இலக்கவியல் திறன்களில் தேர்ச்சி பெறுவது அவசரத் தேவையாக உள்ளது.