ஷா ஆலாம், மார்ச்.02-
Avision Asia பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனம், மகளிர் மேம்பாட்டுத் துறை, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் முன்னோடித் திட்ட பட்டமளிப்பு விழாவில் 30 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பெண்களின் திறன்கள், அறிவு மற்றும் சுயத் திறனாற்றலை மேம்படுத்துவதன் மூலம், உள்ளூர் சமூக மேம்பாடு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் ஒரு முன்முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், பயிற்சியை முடித்த அனைத்துப் பங்கேற்பாளர்களும் எதிர்காலத்தில் பெரும் வெற்றிகளைப் படைக்க வேண்டும் என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பங்கேற்பாளர்கள் தங்கள் சுய மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சிறந்து விளங்க, புகழ்பெற்ற தியாகி சிபில் கார்த்திகேசுவின் மன உறுதியையும் விடாமுயற்சியையும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய ஷா ஆலம் 14-வது மண்டல குடியிருப்பாளர் பிரதிநிதித்துவக் கவுன்சில் உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன், பட்டதாரிகள் இந்தத் திட்டத்துடன் தங்களது கற்றலை நிறுத்திக் கொள்ளாமல், தங்களின் தகுதியையும் தன்னம்பிக்கையையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்தச் சிறப்புமிக்க பட்டமளிப்பு விழா, பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட நோன்புத் துறப்பு விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது.








