ஷா ஆலாம், பிப்ரவரி.26-
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலயங்களின் நிர்வாகங்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேஷக் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் ஷா ஆலாம் செக்சன் 25-இல் உள்ள Dewan Azeliaவில் நடைபெற்றது.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுகச் சந்திப்பு, ஆலயங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் தேவைகளை நேரடியாகக் கேட்டறியும் ஒரு முக்கியத் தளமாக அமைந்தது.

இச்சந்திப்பின் போது, ஆலயங்களுக்கான நில விவகாரங்கள், கட்டிட மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் ஆலய நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆலயங்களின் நலனுக்காக அரசு தரப்பில் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை முறையாகப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் விளக்கமளித்தார்.

ஆலயப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க இக்கூட்டம் ஒரு பாலமாக அமைந்தது. இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் மற்றும் ஷா ஆலம் கிளைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது செயல் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். மிகவும் அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல், கோத்தா கெமுனிங் பகுதியில் உள்ள ஆலய நிர்வாகங்களுக்கும் மக்கள் பிரதிநிதிக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என பிரகாஷ் சம்புநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.








