கோலாலம்பூர், செப்டம்பர்.30-
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 147- ஆவது பிறந்தநாள் விழா, கழகத் தலைவர், மானமிகு. நாக.பஞ்சு அவர்களின் தலைமையில், கடந்த 28.9.2025 ஆம் நாளன்று நண்பகல் 2.30 மணியளவில், கோலாலம்பூர், பிரிக்பீல்ஸ் பாடாங் பெலியா சாலையில் அமைந்துள்ள ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேனாள் தலைமை ஆசிரியர், மதிப்புமிகு. மு. கெங்கம்மாள் மலையரசன் அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார். கழக மதியுரைஞர், ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவில், கழக இளைஞரணித் தலைவர், மானமிகு. ஆதித்தன் மகாமுனி அவர்களின் சொல்லரங்கம் நடைபெற்றது.

அச்சொல்லரங்கும் 1இல், ‘நாளைய இளைஞர்களின் சிந்தனைச் சீர்த்திருத்தம்’ என்ற தலைப்பில் தோழர், ச. பிரபுதேவா அவர்களும் சொல்லரங்கம் 2இல், ‘பெண்களின் முன்னேற்றம்’ எனும் தலைப்பில் தோழர், ச. கலையரசன் அவர்களும் சொல்லரங்கம் 3இல், ‘சமுதாய முன்னேற்றம்’ எனும் தலைப்பில், தோழர், செ. யாழன் அவர்களும் அரங்கம் அதிரப் பேசினர்.

‘பெரியார் பெருந்தொண்டர்’ பாவலர், கு.க. இராமன் அவர்களின் தலைமையில், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, அறிவுப் புதிர் போட்டிகளென பல அங்கங்கள் இடம் பெற்றன.

விழாவில், கழகத் தோழமை இயக்கங்களான மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் மானமிகு. சா. பாரதி, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் துணைத் தலைவர், மானமிகு. த. பரமசிவம் அதன் பொதுச் செயலாளர், மானமிகு. சி.மு. விந்தைக்குமரன் மற்றும் கழகத் தோழர்களும் பொதுமக்களும் ஆசிரியர்களும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.