ஷா ஆலாம், ஆகஸ்ட்.12-
"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்,வரலாறுப் பதிவுகள் உண்டு; அது; சிறியளவிலோ' பெரியளவிலோ' கூட அமைந்திருக்கலாம்". என்று மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தலைவர் 'முனைவர்'பெரு.அ.தமிழ்மணி குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாம், மாப்பிள்ளை உணவகக் கூட்டரங்கில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்த பெரியார் பெருந்தொண்டர் இ.மூர்த்தியின் காலச் சுவடுகள் நூல் அறிமுக விழாவுக்குத் தலைமையேற்றுப் பேசும் போது தமிழ்மணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"மனிதர்கள் எவ்வளவு தூரம் எல்லைகளைத் தாண்டியிருக்கிறார்கள் என்பதை விட, அவர்கள் குடும்பளவில் எப்படியெல்லாம் உழைப்பைப் பதிவாக்கி, உருவாக்கி, வளர்த்திருக்கிறார்கள் என்பது கூட, "காலச் சுவடுகள்"தான்.

பெரியார் பெருந்தொண்டர்-இ.மூர்த்தி ‘சராசரி மனிதரில்லை! தனக்கென ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து அதன்படி வாழ்ந்து வருபவராவார். மனிதர்கள் எப்படியும் வாழலாமென்று சரிந்து விழுகிற இன்றைய வாழ்விலில் பெரியாரை உணர்வுப்பூர்வமாக ஏற்று தமது 76 வயதிலும் தடுமாற்றமின்றிப் பயணித்து வந்துள்ளார் என்பதற்கு 68 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல் சரியானப் பதிவாகும் என்று பிரபல ஊடகவியலாளருமான 'எழுத்தாண்மை ஏந்தல்' பெரு.அ.தமிழ்மணி தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் முன்னதாக, தொழிலதிபர்-அ. சரவணன் செல்வமலர் இணையர்கள் முதல்நூலை வெளிட்டு தொடக்கி வைத்த பிறகு, இவ்விழாவில் மதிக தலைமைச் செயலாளர் பொன்.வாசகம் வாழ்த்துரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து நூலுக்கான கள ஆய்வை சிந்தனைப் பேரவையின் தலைமைச் செயலாளர்-சி.மு.விந்தைக்குமரன் விரிவாக வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த கொள்கைக்கனல் கெ.வாசு- வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் சிந்தனைப் பேரவையின் துணைத்தலைவரான ‘பெருஞ்சுடர்' த.பரமசிவம் விளக்கவுரையும் துணைச் செயலாளர் பெ.கோவிந்தசாமி நிகழ்ச்சிக்கு முன்னதாக அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏ.மணிவண்ணன் வழிநடத்தினார். நிகழ்ச்சியில், மதிக தேசியத் தலைவர் சா. பாரதி, பேராக் பெரியார் பாசறைத் தலைவர் மு.மணிமாறன், முரசொலித்தலைவர் சற்குணம் உள்ளிட்ட முக்கிய இயக்கப் பொறுப்பாளர்கள் பெருமளவு கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.

மூர்த்தியின் குடும்பத்தின் அளவறியா பங்களிப்பால் அறிமுக விழா மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கத் தென்று தமது நன்றியுரையில் த.பெரியசாமி குறிப்பிட்டார். ஐந்து மணிக்குத் தொடங்கி இரவு எட்டு மணிக்கு விழா இனிதாக நிறைவுற்றது.