கோலாலம்பூர், ஜூலை.15-
மலேசியா இலக்கவியல் பொருளாதாரக் கழகமும் (MDEC) தேசிய இலக்கவியல் துறையும் (JDN) சினாப்ஸ் செண்டியான் பெர்ஹாட்டுடனான கேந்திர பங்காளித்துவத்துடன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 மலேசியா டிஜிட்டல் எக்ஸ்செலரேஷன் (MDX) உச்சநிலை மாநாடு மற்றும் 2025 ஸ்மார்ட்கோவ் மலேசியா ஆகியவை செப்டம்பர் 17 முதல் 19 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளன.

மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 எம்டிஎக்ஸ் உச்சநிலை மாநாடு, முதல் முறையாக 2025 ஸ்மார்ட்கோவ் மலேசியாவுடன் ஒரு சேர நடத்தப்படுகிறது. இது, ஆசியானில் முன்னணி இலக்கவியல் நாடாக மலேசியாவின் நிலையை மீண்டும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முதன்மையான இலக்கவியல் பொருளாதாரத் தளமாக, இரண்டு நிகழ்வுகளும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த மாற்றத்தக்க விவாதங்களுக்கான மையமாக விளங்குகின்றன. இவை மடானி அரசாங்கத்தின், நிலையான மற்றும் முழுமையான இலக்கவியல் விவேக நாட்டை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப பிராந்திய தரவுப் பொருளாதாரத்தை வழிநடத்தும் மலேசியாவின் லட்சியத்தை ஆதரிக்கின்றன.
இந்த உச்சநிலை மாநாடு ஆசியானில் மலேசியாவின் இலக்கவியல் தலைமைத்துவத்தை புதுமை, முதலீடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க உதவும் என MDEC தலைமை செயல்முறை அதிகாரி அனுவார் ஃபாரிஸ் ஃபாட்சீல் தெரிவித்தார். இலக்கவியல் சொத்துக்கள் மற்றும் இலக்கவியல் முகவர்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், திறமை மேம்பாடு, புதுமை மற்றும் பொறுப்பான ஏஐ மூலம் சிறந்த பொதுச் சேவைகளை வழங்க ஊக்குவிக்கும் என அவர் கூறினார்.

அடுத்தத் தலைமுறைத் தரவு, அடுத்தத் தலைமுறைக் கணினி, அடுத்தத் தலைமுறை நம்பிக்கை, அடுத்தத் தலைமுறை படைப்பாற்றல் மற்றும் அடுத்தத் தலைமுறை திறமை ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களில் எம்டிஎக்ஸ் உச்சநிலை மாநாடு கவனம் செலுத்தும். வணிகங்கள், அரசுச் சேவைகள், மக்கள் மற்றும் பரந்த பிராந்திய பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் பயன்பாட்டுத் தீர்வுகளில் மலேசியா, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இது அமையும்.