கோலாலம்பூர், பிப்ரவரி.14-
ஓர் அரசியல் கட்சி மற்றும் அரசியல்வாதிகள் என்ற முறையில் நிதி வளங்களை கையாளுவதில் நேர்மையும், நம்பகத்தன்மையை கடைப்பிடித்து அவற்றை எவ்வாறு கையாளுவது என்பதை விளக்கும் வகையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம்முடன் இணைந்து மஇகா ஊழல் தடுப்பு மீதான விழிப்புணர்வு கருத்தரங்கை இன்று ஏற்பாடு செய்தது.
மஇகா தலைமையகத்தில் Hala Tuju SPRM என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மஇகா தொகுதி தலைவர்கள் பெருவாரியாக கலந்து கொண்ட இந்த கருத்தரங்கை எஸ்பிஆர்எம் தலைமையகம் சார்பில் அதன் சமூகவியல் கல்விப் பிரிவின் மூத்த உதவி கண்காணிப்பாளர்களான Senior Assistant Superintenden கேசவன் இராதகிருஷ்ணன் மற்றும் சேகர் மாரியப்பன் கலந்து கொண்டு எஸ்பிஆர்எம் நோக்கங்கள் மற்றும் அதன் பங்களிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
கேசவன் தமது உரையில் , "SPRM-இன் முதன்மை நோக்கம் என்பது வெறும் தண்டனை வழங்குவது மட்டுமல்ல, ஊழலற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும். குறிப்பாக, அரசியல் மற்றும் பொது நிர்வாகத் தளங்களில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் உறுதிப்படுத்துவதில் எங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஒவ்வொரு தலைவரும் பொறுப்புணர்வுடன் செயல்படும் போது, அது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், ஊழல் மலிவு குறியீட்டில் மலேசியா முன்னேறுவதற்கும் வழிவகுக்கும்," என்று விளக்கமளித்தார்.

பின்னர் திசைகளுக்கு அளித்த பேட்டியில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முன்னெடுப்பில் மஇகாவுடன் இணைந்த இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டதாக கேசவன் குறிப்பிட்டார்.
"SPRM-இன் பங்களிப்பு குறித்து மஇகா தலைவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும், மூத்த உதவி கண்காணிப்பாளர் கேசவன் மிகுந்த தெளிவோடும் நிதானத்தோடும் விளக்கமளித்தது அனைவரது கவனிப்பையும் ஈர்த்தது.
கேசவனுடன் இணைந்து எஸ்பிஆர்எம் மூத்த உதவி கண்காணிப்பாளர் சேகர் மாரியப்பனும் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி வளங்களில் கையாளுவதில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.








