நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ரேப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்ரமணியம் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் முன்வைத்த இக்கருத்து, கூட்டரசு அரசியலமைப்பிற்கு உட்பட்டது மட்டுமல்லாமல், ஆலய நிலப் பிரச்சினைகளுக்கும் நிர்வாகச் சிக்கல்களுக்கும் ஒரு வெளிப்படையான மற்றும் முறையான தீர்வாக அமையும் என வீரப்பன் குறிப்பிட்டுள்ளார்.
நில விவகாரங்கள் மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், மாநில அளவிலான அறப்பணி வாரியம் அமைப்பதன் மூலம் ஆலய நிலச் சிக்கல்களை நேரடியாகவும் விரைவாகவும் தீர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தெளிவான ஒரு கட்டமைப்புடன் கூடிய இந்த வாரியம், அதிகாரப் பகிர்வுச் சிக்கல்களைத் தவிர்த்து, ஆலயங்களை முறையாக நிர்வகிப்பதோடு சமூக நலனை உறுதி செய்யும். அதுமட்டுமின்றி ஆலயச் சொத்துக்களை நேர்மையுடனும் பொறுப்புடனும் நிர்வகிப்பதோடு, முறையான கண்காணிப்பிற்கும் இந்த வாரியம் வழிவகுக்கும் என்று வீரப்பன் குறிப்பிட்டார்.
இந்த அறப்பணி வாரியத்தை அமைப்பதற்கு முன்னதாக, ஆலய அமைப்புகள், தன்னார்வ இயக்கங்கள் மற்றும் நில அதிகாரிகளுடன் மாநில அரசு விரிவான ஆலோசனைகளை நடத்தும் என்றும், இதில் சமூகத்தின் குரலுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் என்றும் வீரப்பன் உறுதியளித்துள்ளார்.
மேலும் இந்துக்களின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், ஆலய நிலப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த இந்து அறப்பணி வாரியம் ஒரு முற்போக்கான நடவடிக்கையாக அமையும் என வீரப்பன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








