ஷா ஆலாம், அக்டோபர்.10-
2026-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டமானது, மடானி அரசாங்கம் தொடர்ந்து இந்திய சமூகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதாக உள்ளது என்று சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார். இதற்கு, தீபாவளி பெருநாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள எஸ்டிஆர் உதவித் தொகை சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். பெருநாள் காலத்தில் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க இந்நிதி உதவும் என்றார் அவர்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு 50% டோல் கட்டண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது, குடும்பத்தாருடன் பெருநாளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குப் பயணமாகும் மக்களின் நிதி சுமையைக் குறைக்க அரசாங்கம் காட்டும் அக்கறையின் அடையாளமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் மேலும், 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவிருக்கிறது. இது, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவீன சவால்களை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ அரசாங்கம் காட்டும் உறுதியான முயற்சியாகும்.
மிக முக்கியமாக, இந்திய சமூகத்திற்கான எஸ்டிஆர் மற்றும் சாரா திட்டங்களின் ஒதுக்கீடு 600 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களுக்கும் அந்த நன்மைகள் நேரடியாக சென்றடைய அரசாங்கம் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்றும் பாப்பாராய்டு கூறினார்.