ஷா ஆலாம், ஆகஸ்ட்.09-
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில், அவரின் சட்டமன்ற சேவை மையம் ஏற்பாட்டில் கோத்தா கெமுனிங்கைச் சேர்ந்த மக்களுக்காக குறிப்பாக 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக ஏஐ AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கள் இன்று சனிக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெற்றன.
ஷா ஆலாம், செக்ஷன் 28, டேவான் கெனாங்கா மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் என்று பல துறைகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டு நன்மை அடைந்தனர்.
இந்தக் கருத்தரங்கில் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் துறை நிபுணர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு, AI-யின் தினசரி பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்வு குறித்து விவரித்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், வேகமாக முன்னேறி வரும் AI செயற்கை நுண்ணறிவு பற்றி தொகுதி மக்கள் தெரிந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த இலவச நிகழ்ச்சியில் இடம் பெற்ற தொடர்பு அமர்வுகள், நேரடிக் காட்சி மற்றும் கேள்வி-பதில் பகுதிகள், பங்கேற்பாளர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.