தம்புன், பிப்ரவரி.15-
மடானி கொள்கையின் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் சமமான வளர்ச்சி மற்றும் நலன்கள் உறுதிச் செய்யப்படும் எனவும் மக்களின் நலனே அரசின் முதன்மை குறிக்கோள் எனவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

மலேசியாவின் பல்துறை இன ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பொங்கல் என்பது விவசாயத்தின் பெருமையை மட்டும் கொண்டாடும் விழா அல்ல; அது நன்றி உணர்வையும், பகிர்வின் பண்பையும் பிரதிபலிக்கும் திருநாள்,” என தம்புன் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் தஞ்சோங் ரம்புத்தான் மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே பேராக் மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் செயல்பட்டு வரும் இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் நில உரிமை சிக்கல்களுக்கு தீர்வு கோரி, பேராக் இந்து சங்கத்தின் ஆலய நில நடவடிக்கைக் குழு சார்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மனு தம்புன் தொகுதியின் மூத்த சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக அரசாங்க நிலங்களில் இயங்கி வரும் சில ஆலயங்கள் நில உரிமை தொடர்பான அனுமதிகள் மற்றும் சட்டபூர்வ நிலை குறித்து தொடர்ந்து விண்ணப்பித்தும், நில அலுவலகங்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என ஆலய நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடைய டத்தோ சுரேஷ்குமார் கூறுகையில், இந்த நாட்டில் பரம ஏழ்மை நிலை களையப்பட வேண்டும் என்பதை இந்த பொங்கல் நிகழ்வில் பிரதமர் மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தி கூறியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக பொங்கல் விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தம்புன் தொகுதியில் உள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பிற மாணவர்களுக்கும் 30 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மேலும், ஐம்பது பெண்கள் இணைந்து பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்ததுடன், குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டுதல் மற்றும் உறியடித்தல் போன்ற போட்டிகளும் இந்நிகழ்வில் முத்தாய்ப்பாக அமைந்தது.








