மொண்டலீஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது கேட்பர்ரி சாக்லேட் ஆலையில் 90 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூலப் பொருட்கள் தயாரிப்பு கோபுரத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.

இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி புதிய உற்பத்தி நிலையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்த முதலீடானது மலேசியா மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் மீது அந்நிறுவனத்தின் நீண்டகால நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மூலப் பொருட்கள் கோபுரம் மூலம் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப் பொருளான சாக்லேட் க்ரம்ப், இதுவரை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இனி உள்ளூரிலேயே தயாரிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் மலேசியாவில் உள்நாட்டு உற்பத்தித் திறனும் விநியோகச் சங்கிலி வலிமையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆலையில் முழுமையான தானியங்கி தூள் கையாளும் அமைப்பு, புதிய தலைமுறை டி-ரியக்டர் மற்றும் மேம்பட்ட கொழுப்பு கையாளும் அமைப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மலேசியாவில் முதன்முறையாக இந்த வடிவமைப்பிலான டி-ரியக்டர் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், மலேசியப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கையாள சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களும் மொண்டலீஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஆலைகளுக்கு சேவை வழங்கும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையமான மிடா தலைமைச் செயலதிகாரி டத்தோ சிக் ஷம்சுல் இப்ராஹிம் சிக் அப்துல் மாஜிட் வெளியிட்டுள்ள தகவலின்படி, மலேசியாவின் உணவு உற்பத்தித் துறை 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.9 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 40.9 சதவீதம் அதிகமாகும்.
இந்த புதிய வசதி தற்போது மொண்டலீஸ் நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பில் சாக்லேட் க்ரம்ப் உற்பத்திக்கான முன்னோடி ஆலையாக ஷா ஆலாம் ஆலையை நிலைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.








