செகாமட் கோமாளி தோட்ட மக்களுடன் “ஜலினான் மெஸ்ரா மடானி கொமுனிடி லாடாங் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் இனிமையான மாலைப் பொழுதை செலவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறையின் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

மக்களுடன் நேரடியாக அமர்ந்து உரையாடுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து கொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் போது மடானி செகாமாட் நடமாடும் சேவை மையமும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் தேவைகளை நேரடியாகத் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்கள் 50 பேருக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகளும் வழங்கப்பட்டன.

மேலும், மக்களிடம் நேரடியாகச் செல்வது வெறுமனே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மட்டுமல்ல என்றும், அவர்களின் குரலைக் கேட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு தேவையான உதவிகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதே முக்கிய நோக்கம் என்றும் யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மக்கள் பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து நெருக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், செகாமாட் நகரம், கிராமம் அல்லது தோட்டப்பகுதி என எந்த வேறுபாடுமின்றி மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குரலைக் கேட்டு தொடர்ந்து இணைந்து செயல்படுவேன் என்றும் உறுதியளித்தார்.








