கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-
இந்தியாவிற்கும் ஆசியானுக்கும் இடையில் ஆழமான கலாச்சார, பண்பாட்டை வேரூன்றச் செய்யும் இசை மற்றும் நடன விழா, கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், நுண்கலைக் கோயில், சாந்தானந்த் ஆடிட்டோரியத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இசை மற்றும் நடனப் பயணம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தியா – ஆசியான் கலாச்சார நல்லிணக்க விழாவிற்கு மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவுடன், ஆசியான் நாடுகள் ஒன்றைத் தொடர்புப்படுத்தும் இந்தக் கலாச்சார நல்லிணக்க இசை விழாவில் இம்முறை இந்தியாவின் கலாச்சார நிகழ்வுகளுடன் மலேசியா மற்றும் கம்போடியா முதலிய ஆசியான் நாடுகளின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இந்த பிராந்தியத்தில் ஆசியான் நாடுகளில் பிரபலமாக விளங்கும் மூங்கில் நடனம், இராமயணம் நாடகம் போன்றவை படைக்கப்பட்டது, வந்திருந்த பார்வையாளர்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது.

இந்தக் கலாச்சார நிகழ்வுடன் கோலாலம்பூரில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் பாரத் கிளப்பின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
