Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு
சிறப்பு செய்திகள்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

தாய்லாந்து தலைநகர் பேங்காக் புத்தாக்க விருதுகளில் (Bangkok Innovation Awards) இரண்டு தங்கப் பதக்கங்களையும், தொடக்கப்பள்ளி பொறியியல் பிரிவில் இரண்டாம் இடத்தையும் வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள கெடா, லுனாஸைச் சேர்ந்த நான்கு இந்திய மாணவர்களைச் சந்தித்தது ஒரு பெருமிதமான - நெகிழ்ச்சியான அனுபவம் என்று மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சாதனையை நிகழ்த்திய லுனாஸ், கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இளநேயன் யுவராஜன், தீர்ச்சனா முனியாண்டி மற்றும் சுல்தான் பத்லிஷா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இளஅருண் யுவராஜன், இளமாறன் முனியாண்டி ஆகியோரை, கடந்த வாரம் புத்ராஜெயாவிலுள்ள மனித வள அமைச்சுக்கு நேரில் அழைத்து அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மலேசிய இந்திய மாணவர்கள் சர்வதேச மேடைகளில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், ஆக்கபூர்வமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புத்தாக்கச் சிந்தனைகளால் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு இவர்களின் வெற்றி ஒரு தெளிவான சான்றாகும் என்று அவர் கூறினார்.

குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற STEM துறைகளில் இந்த இளம் இந்தியத் திறமையாளர்களின் ஆற்றல் நாட்டின் கண்ணியத்தையும் நற்பெயரையும் உலகளவில் உயர்த்தியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.

இந்த வெற்றியின் பின்னணியில் மாணவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்ட தியாகம் தமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட டத்தோ ஶ்ரீ ரமணன், பேங்காக்கில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு நேரில் சென்றதைச் சுட்டிக் காட்டினார்.

இத்தகைய குடும்ப ஆதரவும் ஊக்கமுமே இந்த இந்திய மாணவர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறது என்றும், ஒருவரது வெற்றி என்பது தனிப்பட்ட முயற்சியால் மட்டுமல்லாமல் கூட்டு ஆதரவின் மூலமே சாத்தியமாகிறது என்பதையும் இது நினைவூட்டுவதாக அவர் கூறினார்.

அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமைய மனதார வாழ்த்தியதோடு, தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு உலக அரங்கில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க மற்ற மலேசிய இந்திய மாணவர்களுக்கும் இவர்களின் வெற்றி ஓர் உந்துதலாக அமையும் என டத்தோ ஶ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்து அறப்பணி வாரியம்: மாநில  அரசுக்கு வீரப்பன் சுப்ரமணியம் ஆதரவு

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்து அறப்பணி வாரியம்: மாநில அரசுக்கு வீரப்பன் சுப்ரமணியம் ஆதரவு

நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கின்னஸ் (Guinness) புனித பேட்ரிக் தின கொண்டாட்டம்

நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கின்னஸ் (Guinness) புனித பேட்ரிக் தின கொண்டாட்டம்

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு