சுங்கை பட்டாணி, மார்ச்.15-
மடானி அரசாங்கத்தின் கீழ் இந்தியர்களின் நலனுக்காக 8 மாநிலங்களில் 10 மின் சுடலைகளை அமைக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் துறையின் சிறப்புப் பணி அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஜோகூரில் 2, பேராவில் 2, சிலாங்கூர், மலாக்கா, கெடா, நெகிரி செம்பிலான், பகாங், பினாங்கு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மின் சுடலைக்கானக் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன. மின் சுடலை கட்டுமானத்திற்காக வழங்கிய மானியத்தின் தேதியிலிருந்து ஓராண்டுக்குள் அனைத்து மின் சுடலைகளும் கட்டி முடிக்க வேண்டும் என்பது பிரதமர் துறையின் கோரிக்கையாகும்.
குறிப்பாக, கெடா, சுங்கை பட்டாணி, செமிலிங் வட்டாரத்தில் மின் சுடலை அமைக்க பிரதமர் துறை 2.5 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கியுள்ளது. ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்த ஆலயங்களுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் இந்த மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 8 மாநிலங்களிலும் நடைபெற்று வரும் மின் சுடலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்ற அறிக்கைகளைப் பிரதமர் துறை இலாகா தொடர்ந்து கண்காணிக்கும் என்று சண்முகம் மூக்கன் குறிப்பிட்டார்.
அதே சமயம், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி பெறப்பட்ட இந்த நிதியை மக்கள் பயன் பெற குறிப்பிட்டக் காலத்தில் மின் சுடலையைக் கட்டி முடிக்க முழு முயற்சியில் இறங்குவதாகவும் ஆலயத் தலைவர் இராஜேந்திரன் உறுதி கூறினார்.








