கிள்ளான், ஜூலை.20-
கிள்ளான் ரோட்ரி கிளப்பின் புதியத் தலைவராக கிள்ளான் பிரமுகரும், தொழில் அதிபருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் ரவிராஜ்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகத் துடிப்பாகச் செயல்பட்டு வரும் கிள்ளான் ரோட் ரிகிளப் ஒரு பாரம்பரிய கிளப் ஆகும். கிள்ளான் ரோட்ரி கிளப் வரும் 2030 ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கிறது.
இந்த கிளப்பில் வர்த்கத் தலைவர்கள், தொழில் அதிபர்கள், தொழில் வல்லுநர்கள், ஓய்வு பெற்றவர்கள் போன்றோர் உறுப்பினர்களாக உள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் டான் ஸ்ரீ வரை மற்றும் நிர்வாகிகள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை இந்த கிளப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் கிள்ளான் ரோட்ரி கிளப்பின் 2025 முதல்– 2026 ஆம் ஆண்டுக்கானப் புதியத் தலைவராக டத்தோ ஶ்ரீ டாக்டர் ரவிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான 95 ஆவது பதவியேற்புச் சடங்கு நேற்று கிள்ளானில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. கிள்ளான் ரோட்ரி கிளப்பின் முன்னாள் தலைவர் ஏவிஎம் பிரேம் குமார், புதிய தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ரவிராஜிற்கு பதவியேற்புப் பதக்கத்தைக் கழுத்தில் அணிவித்துச் சிறப்புச் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஶ்ரீ டாக்டர் ரவிராஜ், கிள்ளான் ரோட்ரி கிளப்பின் 95 ஆவது தலைவர் என்ற முறையில் நீரிழிவு நோயாளிகளுக்கான இலவசப் பரிசோதனை மையம் ஒன்றை அமைப்பது தம்முடைய தலையாயத் திட்டமாகும் என்றார்.
படித்தவர்கள், தொழில் அதிபர்கள் உட்பட நிபுணத்துவம் வாய்ந்தவர்களைச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்வதை தாங்கள் வரவேற்பதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் ரவிராஜ் குறிப்பிட்டார்.

கிளப்பின் முன்னாள் தலைவர் ஏவிஎம் பிரேம் குமார் கூறுகையில், கிள்ளான் ரோட்ரி கிளப் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட போதிலும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள், தங்களின் தலையாய இலக்கு என்றார்.
பல்வேறு தனித்துவமானச் சிறப்புகளைத் தாங்கிய, கிள்ளான் ரோட்ரி கிளப் தனது நூற்றாண்டு விழாவை மிக உற்சாகமாகக் கொண்டாடக் காத்திருக்கிறது.