கோல குபு பாரு, ஆகஸ்ட்.18-
B40 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை இலக்காகக் கொண்டு கோல குபு பாரு நகரில், ஜாலான் டத்தோ மூடா ஜாஃபாரில் தாரா இலவச டியூஷன் மையம் திறக்கப்பட்டுள்ளது.

தாரா அறக்கட்டளை, கல்வியாளரும், மூடா கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஆர். சிவபிரகாஷ் மற்றும் பெர்சத்துவான் பெர்பாடுவான் உலு சிலாங்கூர் ஆகிய முத்தரப்பு ஏற்பாட்டில் இந்த இலவச தாரா டியூஷன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை தாரா அறக்கட்டளையின் தலைவரும், தோற்றுநருமான டத்தோ பர்டீப் குமார் குக்ரேஜா முன்னிலையில் டாக்டர் சிவபிரகாஷும், இயக்கப் பொறுப்பாளர் எஸ். ஶ்ரீ காந்தும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

தாரா அறக்கட்டணையின் தோற்றுநர் டத்தோ பர்டீப் குமார் கூறுகையில் B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் ஆரம்பக் கல்வியில் கவனம் செலுத்துவதன் மூலம், பின்தங்கிய சமூகங்களிடையே வறுமை சுழற்சியைத் தகர்க்க முடியும் என்றார்.
B40 குடும்பங்களில் பெற்றோர்கள் போதுமான கல்வியைக் கொண்டிருக்காத காரணத்தினால் பள்ளிப் பாட நடவடிக்கைகள் தொடர்பாக தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியாத நிலையில் உள்ளனர். இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளில் 90 விழுக்காட்டினர் பெற்றோர்களைப் போலவே உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மாற வேண்டியுள்ளது.

எனவே இதனைத் தடுக்க இத்தகைய பிள்ளைகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஆரம்பக் கல்வியை வழங்கவும், வழிகாட்டவும், உரிய கல்வி வாய்ப்பை ஏற்படுத்தவும் தாரா அறக்கட்டளை ஏற்பாட்டில் இந்த இலவச டியூஷன் மையம் திறக்கப்பட்டுள்ளதாக டத்தோ பர்டீப் குமார் விவரித்தார்.

தாரா டியூஷன் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் சிவபிரகாஷ் கூறுகையில் B40 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமின்றி யார் – யார் டியூஷன் படிப்பதற்கு வாய்ப்பின்றி இருக்கிறார்களோ அனைவரும் இந்த தாரா இலவச கல்வி மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

ஒன்றாம் வகுப்பு முதல் படிவம் 5 வரைக்குமான மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இலவச டியூஷன் கல்விக்குத் தொண்டூழிய ஆசிரியர்களும் வரவேற்கப்படுவதாக டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்தார்.
கோல குபு பாரு வட்டாரத்தில் தாரா இலவச கல்வி மையம் திறக்கப்பட்டு இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் மகேஸ்வரி தெரிவித்தார்.

இந்த இலவச டியூஷன் மையம் திறக்கப்பட்டு இருப்பது பிள்ளைகள் டியூஷன் பயில்வதற்குத் தம்மைப் போன்ற B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கல்விச் செலவினத்தைக் குறைத்துள்ளதாக கடந்த 9 ஆண்டுகளாக கோல குபு பாருவில் வசித்து வரும் மலாய்க்கார பெற்றோர் தெரிவித்தார்.

படிப்பு மட்டுமின்றி நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் ஒரு மையமாக தாரா இலவச கல்வி மையத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் சேர்த்து இருப்பதாக பெற்றோர் மகேஸ்வரி தெரிவித்தார்.

முன்னதாக, தாரா இலவச கல்வி மையம் நிறுவப்பட்டு இருப்பது தொடர்பில் டத்தோ பர்டீப் குமார், டாக்டர் சிவபிரகாஷ் மற்றும் ஶ்ரீ காந்த் ஆகிய மூவரிடையே கருத்திணக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.