ஈப்போ, பிப்ரவரி.12-
கொடிய புற்றுநோயுடன் போராடி வரும் நான்கு வயது சிறுவன் ஷேசந்தின் உயிர் காக்கும் சிகிச்சைக்காக, 2 லட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்கி ம.இ.கா. தனது கருணைக் கரங்களை நீட்டியுள்ளது.
சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த சிறுவன் ஷேசந்த் உதயகுமார், தனது ஒன்றரை வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு சிறுநீரகத்தை இழந்தவர். தொடர் கீமோதெரபி சிகிச்சைகளுக்குப் பிறகும், கடந்த ஆண்டு மீண்டும் அவரது நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் புற்றுநோய் பரவியது கண்டறியப்பட்டது. பலமுறை அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் நவீன சிகிச்சை பெறுவதே அச்சிறுவனின் உயிரைக் காக்க உள்ள ஒரே வழியாகும்.

சிறுவனின் சிகிச்சைக்காகப் பொதுமக்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்பதை அறிந்த பேரா மாநில ம.இ.கா. தலைவர் டான் ஶ்ரீ எம். ராமசாமி, இவ்விவகாரத்தை ம.இ.கா. தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டுச் சென்றார்.
தஞ்சோங் மாலிம் ம.இ.கா. அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்த டான் ஶ்ரீ ராமசாமி, கட்சியின் சார்பில் 2 லட்சம் ரிங்கிட் வழங்கப்படுவதாக அறிவித்தார்.
சிறுவனின் குடும்பத்திற்கு, ம.இ.கா-வின் இந்த நிதியுதவி ஒரு பெரும் நம்பிக்கையையும், வாழ்வாதார ஒளியையும் பாய்ச்சியுள்ளது.
தாங்கள் இக்கட்டான போராட்ட நிலையில் இருந்த போது, உரிய நேரத்தில் கைகொடுத்து உதவிய ம.இ.கா. தலைமைத்துவத்திற்குச் சிறுவனின் தந்தை உதயகுமாரும், தாயார் திலகாவும் கண்ணீர் மல்கத் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்."எங்கள் மகனின் உயிரைக் காக்கப் போராடிக் கொண்டிருந்த வேளையில், இந்த உதவி எங்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது" என அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
தங்களுக்கு உரிய நேரத்தில் இத்தகைய பெரும் உதவியைச் செய்த சிறுவனின் தாயார் திலகாவும், தந்தை உதயகுமாரும் மஇகாவிற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.








