மோரிப், ஆகஸ்ட்.05-
2025 ஆம் ஆண்டுக்கான ஆடிப் பெருக்கு விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை மோரிப் கடற்கரையில் மிக உற்சாகமாக வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டது. கலாச்சார மற்றும் ஆன்மீக அம்சங்களுடன் பொருள் பதித்த இவ்விழாவில் , நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

நீர்நிலைகள் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பாரம்பரிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வரும் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி மோரிப் கடற்கரையில் மூன்று நாள் வைபவமாக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மைப் பிரதிநிதித்து அந்த அமைச்சின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மலேசிய இந்தியர்கள் தங்களின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பேணி, அதனைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான ஒற்றுமை விழாவாக இந்த ஆடிப் பெருக்கு அமைந்து இருப்பது குறித்து டிக்காம் லூர்ட்ஸ் பெருமிதம் தெரிவித்தார்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த பழமையான பாரம்பரிய விழா, ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளாக, மோரிப் கடற்கரையில் நடைபெறும் இந்தக் கொண்டாட்டம், அர்ப்பணிப்பு மிகுந்த உள்ளூர் தலைவர்களின் விடாமுயற்சியால் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருவது குறித்து டிக்காம் லூர்ட்ஸ் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆண்டு உள்ளூர் மக்களின் மொத்தம் 187 கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு வகையான உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியப் பொருட்கள் என பல வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இது, இந்த வட்டாரத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோருக்கு ஒரு முக்கியமான பொருளாதார ஊக்கத்தையும் தளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதாக டிக்காம் லூர்ட்ஸ் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டு ஆடிப் பெருக்கு விழா ஓர் ஆன்மீக அனுசரிப்பாக மட்டுமல்லாமல், கலாச்சாரப் பெருமை, பொருளாதார வாய்ப்பு மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஓர் அர்த்தம் பொதித்த சமூகவியல் நிகழ்வாக நடைபெற்றது குறித்து டிக்காம் லூர்ட்ஸ் தமது உரையில் பெருமிதம் தெரிவித்தார்.
அத்துடன் இந்நிகழ்வில் மனித அமைச்சர் ஸ்டீவன் சிம் சார்பாக கலந்து கொண்ட தமக்கு உற்சாக மிகுந்த வரவேற்பு நல்கப்பட்டது குறித்து ஏற்பாட்டுக் குழுவினருக்கு தமது நன்றியை டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்துக் கொண்டார்.