பத்துமலை, ஜனவரி.14-
நாட்டின் தாய்க்கோயிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலைத் திருத்தலத்தில் வரும் ஜனவரி 17ஆம் தேதி சனிக்கிழமை தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை வரை பல்வேறு சிறப்பு நிகழ்வுடன் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா நடைபெறும் என்று இன்று பத்துலைத் திருத்தலத்தில் தேவஸ்தான அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா தெரிவித்தார்.

நாட்டின் இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவுடன் (MAHIMA) இணைந்து, அன்றைய தினம் பிரம்மாண்டமான 'ஒற்றுமைப் பொங்கல்' பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் என்று டான் ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
நமது கலாசாரத் தொன்மையைப் பறைசாற்றும் விதமாகவும், பொங்கல் திருநாளுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையிலும் பல்வேறு பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், போட்டி விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டான் ஶ்ரீ நடராஜா மேலும் விவரித்தார்.
இதனிடைய நாளை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுவிருக்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், கோர்ட்டு மலை ஸ்ரீ கணேசர் ஆலயம் மற்றும் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் ஆகியவற்றில் காலை 10.00 மணிக்கு பொங்கல் பானை வைக்கப்பட்டு, 11 மணிக்கு அபிஷேகம், 12 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை, 12.30 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும் என்று டான் ஶ்ரீ நடராஜா தெரிவித்தார்.








