பேராக் மாநில அரசின் முழு ஆதரவோடு, ஈப்போ கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற இரண்டாவது தேசிய திருமுருக மாநாடு, அரசியல் சார்பற்ற தூய ஆன்மிக நிகழ்வாகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார். இந்தியா மற்றும் உள்நாட்டு அறிஞர்கள் பங்கேற்ற இம்மாநாட்டின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுள்ளதாகவும், இனி ஆண்டுதோறும் இம்மாநாடு தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து இந்திய சமூகத்திற்கான நிதியுதவிகள் குறித்துப் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில அரசு சார்பில் இந்திய சமூக அமைப்புகளுக்கு 6 மில்லியன் ரிங்கிட்டும், தமிழ்ப்பள்ளிகளுக்கு 3.5 மில்லியன் ரிங்கிட்டும், அரசுசாரா அமைப்புகளுக்கு 6 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசின் ‘மித்ரா’ திட்டத்தின் வழியாக ஆலயங்களுக்கு11 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் டத்தோ சிவநேசன் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, மாநிலத்தில் உள்ள ஆலயப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய டத்தோ சிவநேசன், "அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்கள் சவாலாக இருந்தாலும், பேராக் மாநிலத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்ட 60 ஆலயங்களில் இதுவரை ஒரு ஆலயம் கூட இடிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடுகள் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சட்டப்பூர்வமான நிரந்தரத் தீர்வு காண மாநில அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்படும்" என மிக அழுத்தமாகக் கூறினார்.









