தெலுக் இந்தான் இந்து சமூகத்தின் தேவைகளுக்கு தொடர்ந்து உதவவும், அவர்களின் நலனில் அக்கறை செலுத்தவும் பாசீர் பெடாமார் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் உறுதியளித்துள்ளார்.
அண்மையில் தெலுக் இந்தான், இரண்டரை மைலில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்ற வூ கா லியோங் , ஆலய நிர்வாகத்தினரையும் பக்தர்களையும் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆலயம் கோரியுள்ள நிதி ஒதுக்கீட்டு விண்ணப்பம், வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தலைமையிலான அமைச்சில் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இனம், மதம், நிறம் அடிப்படையில் மக்களுக்கு உதவுவதில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது என்றும், பள்ளிவாசல், சுராவ், கோயில், தேவாலயம் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் வூ கா லியோங் வலியுறுத்தினார்.








