சிப்பாங், ஜனவரி.08-
சிப்பாங், சிலாங்கூர் ட்ரெட்ஜிங் (Selangor Dredging) பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 1997-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட முக்கால் ஏக்கர் நிலத்தை மீண்டும் ஆலயத்திடமே ஒப்படைத்தால், தற்போதுள்ள இடத்திலிருந்து ஆலயத்தை மாற்றத் தயாராக இருப்பதாக அப்பகுதி வாழ் இந்தியப் பெருமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈயச் சுரங்க நடவடிக்கைகள் நடைபெற்ற காலம் தொட்டே, கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆலயம் தற்போதைய இடத்தில் வீற்றுள்ளது. மறைந்த டத்தோ த.ம.துரை டிங்கில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, இந்த ஆலயத்திற்காகப் பிரத்தியேகமாக முக்கால் ஏக்கர் நிலத்தை அங்கீகரித்து ஒதுக்கீடு செய்தார்.
ஆனால், அந்த நிலமானது சிப்பாங் நில அலுவலகத்தினராலும், அதன் பின்னர் டிங்கில் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்த டத்தோ ஹாஜி முகமட் ஷெரீப் அவர்களாலும் மடைமாற்றம் செய்யப்பட்டு விட்டதாக ஆலயப் பொறுப்பாளர்களும் கிராம மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட அந்த நிலத்தில், டத்தோ ஹாஜி முகமட் ஷெரீப்பின் பரிந்துரையின் பேரில் சிப்பாங் நில அலுவலகம் கடைகளையும் மண்டபத்தையும் கட்டியுள்ளது.

இது குறித்து டிங்கில் கிராமத் தலைவர் நரேஷ்குமார் சுகுமாறன் கூறுகையில், "ஆலயத்திற்கு மாற்று நிலம் வழங்குவதாகக் கூறிய சிப்பாங் நில அலுவலகம், பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதைக் கைவிட்டு விட்டது. இதற்கிடையில், கடந்த 80 ஆண்டுகளாக ஆலயம் இருக்கும் நிலத்தை, 1991-ஆம் ஆண்டிலேயே 'சுஹைலி' (Suhaili) என்பவருக்கு நில அலுவலகம் விற்பனை செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அமைதியாக இருந்த அந்தத் தனிநபர், தற்போது அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளார். எங்களுக்கு 1997 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அந்த முக்கால் நிலம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நரேஷ்குமார் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், "தனிநபருக்குச் சொந்தமான அந்த நிலத்திலிருந்து ஆலயத்தை அகற்ற நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், டத்தோ த.ம.துரையால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது கடைகளும் மண்டபமும் அமைந்துள்ள அந்த முக்கால் ஏக்கர் நிலத்தை, சிப்பாங் நில அலுவலகம் மீண்டும் ஆலயத்திற்கே திருப்பி தர வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில், ஆலயத்தை இடம் மாற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை," எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தங்கள் முன்னோர்களின் காலத்திலிருந்து வழிபாட்டில் இருக்கும் இந்த ஆலயத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.








