கூலிம், ஆகஸ்ட்.08-
தமிழர்களின் சிறப்பான மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்புமிக்கதாகும். இவ்வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கூலிம் ஹய் தேக் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தில் ( சேரா ஆலயம்) 108 சுமங்கலி பெண்கள் குத்து விளக்குப் பூஜையில் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர்.

ஆலயத்தின் மகளிர் பிரிவின் தலைவி ஜோதிலட்சுமி அவரின் தலைமையில் ஆலய நிர்வாகத்தினர்களின் ஆதரவுடன் ஒவ்வொரு வருடமும் குத்து விளக்குப் பூஜை நடைபெற்று வருகின்றது. இப்பூஜையில் வருடந்தோறும் 108 சுமங்கலிகளுக்கு மேல் கலந்துக் கொள்வார்கள் என்று ஜோதிலட்சுமி கூறினார். வரலட்சுமி பூஜை எல்லா விதமான லட்சுமி கடாட்சங்களும் பெறுவதற்காகவே செய்யப்படும் பிரார்த்தனையாகும்.

கூலிம் ஹய் தேக் பாக்கிலுள்ள ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் (சேரா ஆலயம்) மண்டபத்தில் மாலை 7.00 மணி அளவில் ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புப் பூஜைக்குப் பின் குத்து விளக்குப் பூஜை தொடங்கப்பட்டன.