சுங்கை பட்டாணி, பிப்ரவரி.04-
மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் விஷமிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் உறுதி கூறியுள்ளார்.
சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச வெள்ளி இரத ஊர்வல நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர், அண்மைக் காலங்களாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பிரிவினைவாதக் கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்தார்.
தைப்பூசம் போன்ற புனிதமான திருவிழாக்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் மத, இன பேதமின்றி ஒன்று கூடுவதைச் சகித்துக் கொள்ள முடியாத சில தரப்பினர், திட்டமிட்டே பிரிவினையைத் தூண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, 'சட்டவிரோதக் கோயில்' என்ற பதத்தைத் தீய எண்ணத்துடன் பயன்படுத்தி, மக்களிடையே கிளர்ச்சியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தச் சமூக வலைத்தளங்களில் சிலர் முயற்சிப்பதை யுனேஸ்வரன் வன்மையாகக் கண்டித்தார்.
மலேசியாவின் பல்லின சமூகக் கட்டமைப்பில் ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை நமது பண்பாட்டின் அடையாளங்கள். மக்களின் ஒற்றுமையைச் சகித்துக் கொள்ள இயலாதவர்கள், இத்தகைய தூபங்களைப் போட்டு வதந்திகளைப் பரப்புகின்றனர்.
இத்தகைய பிரிவினைவாத சக்திகள் மீது அரசு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் அத்தகைய தரப்பினர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று யுனேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்தார்.








