புக்கிட் மெர்தாஜாம், மார்ச்.07-
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியேயுள்ள ஸ்ரீ தேவ மருத்துவர் ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் 'ஆண்டு விழா' கொண்டாட்டங்கள், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமூகமாக நடைபெற்றது.
ஆலயத்திற்கு எதிராக இன்று மாலை 3 மணியளவில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இருப்பினும், ஜாலான் கூலிம் பகுதியில் சாலைத் தடைகளை ஏற்படுத்திய போலீசார், நூற்றுக்கணக்கான அதிகாரிகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி நிலைமையைக் கண்காணித்தனர்.
ஆலயத்திற்குச் செல்லும் ஒரு வழிப்பாதை மூடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், பக்தர்கள் தடையின்றி வருகை தந்து தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.
முன்னதாக, இந்தப் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், ஏற்பாட்டாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி ஆலய வழிபாடுகள் வழக்கம் போல் நடைபெற்றன.








