கோலாலம்பூர், மார்ச்.07-
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை வெறும் சட்டச் சிக்கலாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவற்றுக்கு 'சட்டவிரோத கோயில்' எனும் Kuil Haram என்ற முத்திரையிட்டு மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடாது என்று ஜசெக.இளைஞர் பிரிவான DAPSI (டப்சி) வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய கடுமையான சொற்கள் சமூகத்தின் ஒற்றுமையைக் குலைப்பதோடு, குறிப்பிட்ட மதத்தினரை இழிவுபடுத்துவது போல் அமையும் என்றும் DAPSI தலைவர் வூ கா லியோங் சுட்டிக் காட்டினார்.
பல கோயில்கள் நவீன நிலச் சட்டங்கள் உருவாவதற்கு முன்பே பல தசாப்தங்களாகக் கட்டப்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை என்பதை அவர் நினைவுறுத்தினார்.
எனவே, இது போன்ற விவகாரங்களில் மிரட்டல்கள் அல்லது போராட்டங்கள் மூலம் அணுகாமல், பேச்சுவார்த்தை மற்றும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான நடைமுறைகள் மூலம் சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்றும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் தனது டிக் டாக் பதிவில் கேட்டுக் கொண்டார்.
மேலும், வழிபாட்டுத் தலங்களுக்கான நில விவகாரங்களை முறையாகத் தீர்க்க மாநில அரசுகள் மற்றும் மாநகர் மன்றம், ஊராட்சி மன்றங்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சட்டச் சிக்கல்களைக் காரணம் காட்டி புனிதமான இடங்களை இழிவுபடுத்துவதை விடுத்து, அவற்றை அங்கீகரிப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும் எனக் கூறிய வூ கா லியோங், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் பரஸ்பர மரியாதையும் மத நல்லிணக்கமுமே நாட்டின் பலம் என்பதைத் தனது உரையில் ஆணித்தரமாகப் பதிவுச் செய்தார்.








