ஷா ஆலாம், டிசம்பர்.03-
புக்கிட் கெமுனிங் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்து சிலைகளும் இடம் மாற்றப்பட்டு விட்டதாக ஆலய நிர்வாகம் அறிவித்தது.

இன்று டிக் டாக்கில் வைரல் ஆகி வரும் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வ வழிப்பாட்டுச் சிலைகளும் முறையாக ஆகம விதிக்கு உட்பட்டு அனைத்தும் இடம் மாற்றம் செய்து விட்டதாகவும் உடைந்த நிலையில் இருக்கும் அச்சிலையானது கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு சிலை என்பதுடன் அச்சிலை அகற்ற முடியாத சூழ்நிலையில் அங்கே இறுக்கமானக் கம்பிகளைக் கொண்டு பிணைக்கப்பட்டிருந்ததால் அச்சிலையை மட்டும் ஆலய நிர்வாகம் அகற்றாமல் விட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஆலய நிர்வாகமும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதனின் அறிவுறுத்தலின் பெயரில் புதிய இடத்திற்கு மாறிச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்கியது.

அதே வேளையில் இடம் மாறுவதற்கு முன்னதாக, அனைத்து சிலைகளையும் முறையாக இந்து ஆகம விதிபடி அகற்ற வேண்டும் என்று சட்டமன்ற மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனின் ஆலோசனையின் பெயரிலேயே அனைத்து சிலைகளையும் ஆலய நிர்வாகம் அகற்றியதாகவும், அதற்கு ஆதரமாக சில புகைப்படங்களையும் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் வழங்கினர்.

அதே வேளை பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களையோ, செய்திகளையோ அல்லது தனிநபர் குற்றச்சாட்டுகளையோ முறையாக விசாரித்தப் பிறகு பகிரவோ அல்லது நம்பும்படியும் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.








