அலோர் ஸ்டார், ஜனவரி.22-
தைப்பூசத் திருவிழாவையொட்டி, கெடா மாநில அரசாங்கம், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர் தலைமையில் நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
கெடா மாநில நிர்வாகத்திற்கான துணைச் செயலாளர் டத்தோ டாக்டர் நாட்ஸ்மான் முஸ்தஃபா கையொப்பமிட்ட அந்த அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி, இந்த விடுமுறையானது விடுமுறைச் சட்டம் 1951, சட்டம் 369, பிரிவு 9(1)-இன் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளின் தலைவர்கள், சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்கள், அத்துடன் மாநிலத்தில் உள்ள ஊராட்சித் துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதமானது, நேற்று சனூசியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டது.








