கோலாலம்பூர், ஜனவரி.06-
உலகப் புகழ் பெற்ற பத்துமலைத் திருத்தலத்தில் அமைக்கப்படவுள்ள நகரும் மின் படிக்கட்டான Escalator நிர்மாணிப்புத் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம் நாளை மறுநாள் விளக்கம் அளிக்கவுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான சாதக பாதகங்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
வரும் ஜனவரி 8 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில், பத்துமலைத் திருத்தல வளாகத்தில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது, மின் படிக்கட்டு திட்டத்தின் தற்போதைய நிலை, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்களை தேவஸ்தானம் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்திச் சுற்றுலாத் தலமான பத்துமலையில் மேற்கொள்ளப்படும் இந்த நவீன மாற்றங்கள் குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதங்கள் மேலோங்கியுள்ள நிலையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.








