ஈப்போ, ஜனவரி.28-
பேரா மாநிலத்தில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா கொண்டாட்டப்படுகிறது. அதில் பிரதான ஆலயமாக ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் விளங்குகிறது.
இந்த ஆண்டும் தைப்பூசத்தன்று காவடிகள் சுமந்து செல்லும் வழிகளில் உள்ள கடைகளிலும், மக்கள் கூடும் கடை பகுதிகளிலும் மதுபானங்கள் விற்கத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த விதிமுறை, 3 நாட்களுக்கு தொடரும். மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு தடை விதிக்க்ச் வலியுறுத்தப்படும் அறிக்கைகளை ஊராட்சி மன்றங்கள் வழங்கும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.
அதே வேளையில் தைப்பூசத்தன்று மது குடித்து ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை பேரா மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான சிவநேசன் தெரிவித்தார்.
நேற்று பேரா மாநில அரசாங்க செயலகத்தில் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்றம், போலீஸ் , இந்து சங்கம் , இந்து தர்ம மாமன்றம் , அரச்சகர் சங்கம் உட்பட சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வுக்குப் பின்னர் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரனுடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.
தைப்பூசத்துன்று வழக்கத்திற்கு மாறாக ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் அதிகமான பக்தர்கள் கூடுவதால் பாதுகாப்பு அம்சங்களுக்கு போலீசார் முக்கியத்துவம் வழங்குவர். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
அதே வேளையில் ஆலயங்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைபடுபவர்களுக்கு மருத்துவர்களும் ஆலய வளாகத்தில் பணியில் ஈடுபடுவர் என்றார்.
ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் அதிகமான நகைகளை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும். உடன் அழைத்து வரும் பிள்ளைகளை முறையே கண்காணிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
மேலும் பேசிய அவர், புந்தோங்கில் இருந்து கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியத்திற்குச் செல்ல ஜாலான் துன் ரசாக் சாலையில் உள்ள பிரதான பாலம் தற்காலிகமாக திறந்துவிடப்படும் என்று மறு உறுதிப்படுத்தினார்.
அந்த பாலத்தின் நிர்மாணிப்பு பணி இன்னும் நிறைவு பெறவில்லை. இருந்த போதும் தைப்பூசத்தை முன்னிட்டு ஈப்போவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பால் குடம், காவடிகள் ஏந்தி கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு பாலத்தின் ஒரு பகுதி திறந்துவிடப்படும் .
இரவில் விளக்கினால் அலங்கரிக்கப்பட்டும் காவடிகள் ஏந்திச் செல்லும் பக்தர்கள் மூன்று டன் கொண்ட லாரிகளை மட்டும் அந்த பாலத்தில் கடந்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார்.
இம்மாதம் 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரைக்கும் அந்த பாலத்தை பக்தர்கள் பயன்படுத்தலாம் என்ற விளக்கத்தை டத்தோ சிவநேசன் அளித்தார்.








