கோலாலம்பூர், ஜனவரி.24-
“கந்தனுக்கு அரோகரா... கடம்பனுக்கு அரோகரா!" - விண்ணதிரும் இந்தப் பக்தி முழக்கங்களுக்கு இடையே, உலகப் புகழ் பெற்ற பத்துமலைத் திருத்தலம் இன்று ஒரு மாபெரும் பக்திப் பெருங்கடலாகக் காட்சியளித்தது.
தைப்பூசத் திருநாளுக்கு இன்னும் ஒரு வாரம் இடைவெளி இருக்கும் நிலையிலேயே, இன்று சனிக்கிழமை அதிகாலையிலேயே பத்துமலையில் 'குட்டி தைப்பூசம்' களைகட்டியது.

"விண்ணைப் பிளக்கும் உருமி மேளத்தின் அதிரடி இசை... 'அரோகரா' கோஷத்தால் அதிரும் பத்துமலை! அதிகாலை 4 மணிக்கே பனித்திரை விலகும் முன்னே, ஞானக் கடவுள் முருகனின் அருள் வேண்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பத்துமலை அடிவாரத்தில் கடலெனத் திரண்டனர்.
மலையின் உச்சாணிக் கோபுரத்திலிருந்து கீழே பார்த்தால் எங்கு நோக்கினும் பக்தி வெள்ளம்! செந்நிற ஆடை அணிந்து, நெற்றி நிறையத் திருநீறு பூசி, மனமுருகிப் பாடிவந்த பக்தர்களின் கூட்டம், அந்தத் திருத்தலத்தையே ஒரு மாபெரும் பக்திப் பெருங்கடலாக மாற்றியது.. உருமி இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் காவடிகளும், மக்களின் பக்தி ஆரவாரமும் பத்துமலையை இன்று விண்ணுலகமாகவே மாற்றியிருந்தது.!

ஒருபுறம் ஆக்ரோஷமாக அதிரும் உருமி மேளத்தின் இசை, மறுபுறம் விண்ணை முட்டும் 'வேல்! வேல்!' கோஷம்!
பத்துமலையின் அந்த 272 வண்ணப் படிகளிலும், எங்கு நோக்கினும் பக்திப் பெரு வெள்ளம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் சிரசின் மீது பால் செம்புகளைச் சுமந்தவாறு, ஒருமித்த குரலில் 'வேல்! வேல்!' என்று முழக்கமிட்டக் காட்சி, பார்ப்பவர் எவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அலகு குத்தியும், பன்னீர் மற்றும் மயில் காவடிகளை ஏந்தியும் வந்த பக்தர்கள், முருகனின் வாகனமான மயில் தோகை விரித்தாடுவது போல ஆங்காங்கே அசைந்து, அசைந்து வந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக, அந்தப் பிரம்மாண்ட சுழல் காவடிகள் பக்திப் பரவசத்தின் உச்சம்!

லட்சக்கணக்கான இதயங்கள் ஒன்றாக இணைந்து எழுப்பிய அந்த 'வேல்... வெற்றிவேல்...' என்ற முழக்கம், குகைக் கோயில் முழுவதும் எதிரொலித்தது. நாதஸ்வர இன்னிசையும், உடுக்கை ஒலியும் பக்தர்களின் ஆட்டத்திற்கு மெருகூட்டின. இது வெறும் திருவிழா அல்ல... பக்தியும் நம்பிக்கையும் சங்கமிக்கும் ஒரு மாபெரும் பக்திப் பெருங்கடல்!"
தைப்பூசத் திருவிழாவின் முன்னோட்டமாக அமைந்த இந்த 'குட்டி தைப்பூசம்', மலேசியத் தமிழ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும், தமிழ்க் கடவுள் முருகன் மீதான அளப்பரிய பக்தியையும் உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

இன்று காணப்பட்ட இந்தத் திருவிழாக் கோலம் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இன்னும் கூடுதல் பொலிவோடும், பக்தி ஆரவாரத்தோடும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார இறுதி நாள் என்பதால், பத்துமலையின் ஒவ்வொரு அங்குலமும் பக்தர்களின் அரோகரா கோஷத்தாலும், உருமி மேளத்தின் அதிரடியாலும் நாளை இன்னும் பிரம்மாண்டமாக அதிரப் போகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா!








