செனாய் தோட்ட, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 46-ஆம் ஆண்டு திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்களையும், மக்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமை, ஆன்மிகம் மற்றும் நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதாக மலேசியத் தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

46 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இவ்வாலயம், வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் முக்கிய மையமாகவும் திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

இந்த அர்த்தமுள்ள நன்னாளில் ஆலயத்திற்கு 5,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த நிதி ஆலய நிர்வாகக் குழுவின் கலாச்சார மரபுகளையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பேணிப் பாதுகாக்கும் பணிகளுக்கு பயனளிக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும், திருவிழாவை சிறப்பாக ஏற்று நடத்திய அனைவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த ஆண்டு திருவிழா நமது நாட்டின் பல இன, மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை மேலும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தொடர்ந்து திகழும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.









