கோலாலம்பூர், மார்ச்.17-
நாட்டில் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்து ஆலயங்கள் ஒருமித்த கருத்துடன், ஒரே இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்பதே மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவின் நோக்கமாகும் என்று அதன் தலைவர் டத்தோ என். சிவகுமார் தெரிவித்தார்.
மஹிமா யாருக்கும் போட்டியல்ல. ஆனால், நாட்டின் உள்ள ஒவ்வோர் ஆலயத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும், அனைத்து ஆலய நிர்வாகங்களும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும், கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் ஆலயப் பிரச்னைகளைக் கண்டறியவும் மஹிமா தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக டத்தோ சிவகுமார் விளக்கினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மஹிமாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றது நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாகத்தினரை சந்திக்கும் பொருட்டு மாநிலந்தோறும் டத்தோ சிவகுமார் வருகை மேற்கொண்டு வருகிறார்.
பகாங் மாநிலத்திற்கு அடுத்தப்படியாக நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகப் பொறுப்பாளர்களைச் சந்திக்கும் நடவடிக்கையில் டத்தோ சிவகுமார் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ஜெலுபு, ஜெம்புல், தம்பின் மற்றும் பகாவ் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆலயப் பொறுப்பாளர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பஹாவ், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சந்தித்தார்.
அதன் பின்னர் சிரம்பான், ரெம்பாவ், கோலபிலா, மற்றும் போர்ட்டிக்சன் மாவட்டங்களில் உள்ள ஆலயங்களின் பொறுப்பாளர்களை மாலை 6 மணிக்கு சிரம்பான், ஸ்ரீ மகா ராஜ ராஜஸ்வரர் தேவஸ்தான ஆலயத்தில் டத்தோ சிவகுமார் சந்தித்தார்.
ஆலயப் பொறுப்பாளர்களை நேரடியாக சந்திப்பதில் தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட டத்தோ சிவகுமார், ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் கண்டறிந்தார்.
ஆலயப் பொறுப்பாளர்கள் சிலர், தங்கள் ஆலயப் பிரச்னைகள் தொடர்பான விவரங்களை மகஜர் வடிவில் டத்தோ சிவகுமாரிடம் ஒப்படைத்தனர்.








