Oct 16, 2025
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் ஆயிரம் கோவில்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி: அரசிடம் பரிந்துரை
ஆன்மிகம்

நாடு முழுவதும் ஆயிரம் கோவில்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி: அரசிடம் பரிந்துரை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

நாடு முழுவதும் உள்ள ஆயிரம் கோவில்களுக்கு ஒரு முறை வழங்கக்கூடிய தலா 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்குவது உட்பட ஐந்து முக்கிய விவகாரங்கள் குறித்து டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தலைமையிலான மித்ராவின் இந்திய சமூக முன்முயற்சி அமலாக்கக் குழு இன்று விவாதித்து முடிவெடுத்துள்ளது.

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா, நாடு முழுவதும் உள்ள இந்திய சமூகத்தினருக்குப் பயனளிக்கும் வகையில் இந்திய பாரம்பரிய கிராமம், தமிழ்ப்பள்ளிகளுக்கான ஸ்மார்ட் போர்ட், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி மற்றும் கோவில்களுக்கு நிதி உதவி ஆகிய திட்டங்களை விரைவில் தொடங்கவிருப்பதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இன்று தமது அமைச்சில் நடைபெற்ற மித்ராவின் இந்திய சமூக முன்முயற்சி அமலாக்கக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

5 முக்கிய திட்டங்களில் 21 இந்திய பாரம்பரிய கிராமங்களை மேம்படுத்தும் திட்டமும் அடங்கும். 21 இந்திய பாரம்பரிய கிராமங்களில் 33 திட்டங்களை வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு கையாளும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இரண்டாவது திட்டம், நாட்டின் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் யாயாசான் டிடிக் நெகாரா மூலம் 400 ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படும்.

பள்ளிகளின் அளவு, மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொருத்து வழங்கப்படும் ஸ்மார் போர்டுகளில் எண்ணிக்கை அமையும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஸ்மார் போர்டைக் கொண்டிருக்கும் பள்ளிக்கு மீண்டும் வழங்கப்படாது. ஸ்மார் போர்டை விநியோகிப்பது, அதனைப் பொருத்துவது, கற்றல் வசதியை ஏற்படுத்துவது முதலியவற்றை யாயாசான் டிடிக் நெகாரா கவனிக்கும் என்றார் அவர்.

தவிர, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனையின் பேரில் கோவில்களில் சமய வகுப்பு, தமிழ் போதனை, பரதநாட்டிய வகுப்பு முதலியவற்றுக்கு ஒரு நிதி வழங்குவதற்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. இவ்விவகாரம் பிரதமர் அலுவலகத்தின் எழுத்துப்பூர்வ ஒப்புதல், நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இதற்கு பதிலாக நாடு முழுவதும் உள்ள ஆயிரம் கோவில்களுக்கு தலா 20,000 ஆயிரம் ரிங்கிட் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளைச் சீரமைக்கும் திட்டம் குறித்து இன்னும் தீர்க்கமாக முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக தமது செயலாளர் டத்தோ பி. அன்புமணி, NUPW எனப்படும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் ஒரு சந்திப்பை நடத்தவிருப்பதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

முன்பு, இந்தத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களை மட்டுமே உள்ளடக்கி இருந்தது. ஆனால் சிறு விவசாயிகளையும் இதில் சேர்க்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இந்திய மாணவர்களை உள்ளடக்கிய முதலாம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை மற்றும் முதலாம் பாரத்திலிருந்து ஆறாம் பாரம் வரை பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு “பள்ளிக்கு திரும்புவோம்” என்ற திட்டத்தின் கீழ் B40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள் மற்றும் பிற பள்ளிப் உபகரணங்களை வாங்குவதற்கு நிதி உதவி வழங்குவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

மேலும் உயர்நிலைக் கல்வியைப் பொறுத்தவரை, பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு தலா 2,000 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி ஒரு முறை வழங்கப்படும் என்றார்.

கடந்த ஆண்டு, சுமார் 8,000 மாணவர்கள் பயனடைந்தனர். இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், இதற்கு சுமார் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஶ்ரீ ரமணனின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ பி. அன்புமணி மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related News