கோலாலம்பூர், பிப்ரவரி.06-
மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையைப் போற்றும் வகையில், 2026-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவின் போது மெக்டொனால்ட்ஸ் மலேசியா பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து இப்பெருவிழாவைக் கொண்டாடியது.

கோலாலம்பூர், ஜாலான் கூச்சிங், ஷெல் எண்ணைய் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அதன் உணவகத்தின் வாயிலாக, நீண்ட தூரம் நடைபயணமாகச் சென்ற பக்தர்களுக்குப் பானங்கள், புத்துணர்ச்சி தரும் பழங்கள் மற்றும் நட்ஸ் (Nuts) போன்ற உணவுப் பொருட்களை வழங்கி அவர்கள் தங்களின் பயணத்தைத் தொடர ஆதரவளித்தது.

மேலும், தைப்பூசத்தின் முக்கியச் சடங்குகளில் ஒன்றான 108 தேங்காய்களை உடைக்கும் வழிபாட்டிலும் மெக்டொனால்ட்ஸ் மலேசியா பங்கேற்றது. புதிய தொடக்கம் மற்றும் தடைகளை நீக்குவதைக் குறிக்கும் இச்சடங்கில் கலந்து கொண்டதன் மூலம், மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் மலேசியர்களின் பாரம்பரியத்திற்கு மதிப்பளிப்பதோடு, அனைவரையும் உள்ளடக்கிய சமூக உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வின் போது பக்தர்களுக்கு சிறப்பு சலுகை அட்டைகளும் வழங்கப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்த மெக்டொனால்ட்ஸ் மலேசியா நிர்வாக இயக்குநர் டத்தோ ஹாஜி அஸ்மிர் ஜாஃபார், மலேசிய மக்களின் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாக விளங்கும் இந்த வழிபாட்டுப் பயணத்தில் பங்கேற்பது தங்களுக்குப் பெருமை அளிப்பதாகத் தெரிவித்தார்.

வெறும் உணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மக்களின் உணர்வுகளுடனும் கலாச்சாரத்துடனும் இணைந்து செயல்படுவதன் மூலம் ஒரு நம்பிக்கைக்குரிய சமூகப் பங்காளியாகத் திகழ்வதே தங்களின் நோக்கம் என அவர் உறுதிப்படுத்தினார்.








