ஈப்போ கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இரண்டாவது தேசிய திருமுருக மாநாடு, மலேசிய இந்தியர்களிடையே மிகப்பெரிய ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டின் உன்னத நோக்கம், அதன் நேர்த்தியான ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களின் எழுச்சிமிக்க வருகை குறித்து ஆன்மிகப் பெரியோர்களும் முக்கியப் பிரமுகர்களும் தங்களின் நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த வகையில், இது போன்ற மாநாடு ஆண்டு தோறும் நடைபெற வேண்டும் என்று மலேசிய முருகப்பக்தர்கள் பேரவையின் தலைவர் மருத்துவர் ஜெயபாலன் கேட்டுக்கொண்டார்.
திருமுருகனை கொண்டாடி, திருமுருகனின் தத்துவங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் திருமுருகன் மாநாட்டை தேசிய அளவில் சிறப்பாக நடத்தியிருக்கும் பேரா மாநில அரசுக்கும், டத்தோ சிவநேசனுக்கும், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் மற்றும் இசைக்கலைஞரான சீர்காழி டாக்டர் ஜி. சிவசிதம்பரம் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளை சேர்ந்த முருகப்பக்தர்கள் கலந்து கொண்டதாக மலேசிய இந்து சங்கத்தின் பேரா மாநில பேரவைத் தலைவர் பொன். சந்திரன் தெரிவித்தார்.
அரசியல் கடந்த ஆன்மிக ஒத்திசைவும், தமிழ் சமயப் பண்பாட்டைக் காக்கும் இத்தகைய மாநாடுகளும் நம் சமூகத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை இவர்களின் கருத்துக்கள் மிக அழகாக உணர்த்துகின்றன. பேராக் மாநில அரசின் இத்தகைய மகத்தான ஆன்மிகப் பணி, எதிர்காலத்திலும் தொய்வின்றித் தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மலேசிய இந்துக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.









